திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்: தமிழில் மந்திர ஓதல் குறித்து அரசு விளக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில், யாகசாலை மற்றும் கோபுர விமான பூஜைகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓதப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு என்பவர், இந்த விழா முழுவதும் தமிழில் நடத்தப்பட வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதனை மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரிய கிளாட் ஆகியோர் விசாரித்தனர்.
அரசு தரப்பில், “யாகசாலை வழிபாடுகள், திருமுறை மற்றும் திருப்புகழ் பாடல்கள், 64 ஓதுவார்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழில் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டது. இதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு ஜூலை 2 அன்று விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் தெரிவித்தது.
கும்பாபிஷேக நேர மாற்றம் குறித்து மனு தாக்கல்:
அதேவேளை, சுவாமி சிவராம சுப்பிரமணிய சாஸ்திரி என்பவர், ஜூலை 7-ல் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தின் நேரத்தை மாற்ற வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் மனுவை தொடர்ந்து சபரிமலை மேல் சாந்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, ஜூலை 7 அன்று காலை 6.15 முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என முடிவெடுத்தது.
இந்த முடிவிற்கு சாஸ்திரி எதிர்ப்பு தெரிவித்தபோதும், நீதிமன்றம் குழுவின் முடிவை ஏற்று அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெறலாம் என தெரிவித்தது. மேலும், எதிர்காலத்தில் கும்பாபிஷேகம் குறித்த நேரத்தை கோயில் விதாயகர் எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.