கவியரசு கண்ணதாசனின் 99-வது பிறந்த நாள் விழா – தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது
தமிழக அரசின் சார்பில் கவியரசு கண்ணதாசனின் 99-வது பிறந்த நாள் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு, சென்னை தி.நகரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, புகழ் பெற்ற கவிஞரின் உருவப் படத்துக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
விழாவில், ஜெ. கருணாநிதி எம்.எல்.ஏ, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் வே. ராஜாராமன், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர் இரா. வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கவிஞரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
இதையொட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில்,
“மூப்பிலாத தேன்தமிழில் இறவாத கவிதைகளைப் படைத்த கவியரசர் கண்ணதாசனின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்! காலத்தால் அழிக்க முடியாத மாமேதைகள் தங்கள் கலைப்படைப்புகளால் என்றும் நம் உள்ளங்களில் நிலைத்து நிற்கின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.