சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பெட்டிகள் அதிகரிப்பு – ரயில்வேயின் அறிவிப்பு
சென்னை புறநகரில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்படுவதாவது:
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் தினசரி சுமார் 12 இலட்சம் பயணிகள் ரயில்களை பயன்படுத்துகின்றனர். அதில், சுமார் 8.6 இலட்சம் பேர் புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்கின்றனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இதுவரை 9 பெட்டிகள் கொண்டிருந்த புறநகர் ரயில்கள் தற்போது 12 பெட்டிகளாக விரிவாக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிபூண்டி, சென்ட்ரல் – சூலூர்பேட்டை மற்றும் கடற்கரை – செங்கல்பட்டு பாதைகளில் இயங்கும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மேலும் 4 லட்சம் பயணிகளுக்கான வசதி ஏற்படுவதாகவும், பீக் நேரங்களில் ஏற்படும் நெரிசலை குறைத்து, பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.