அர்ச்சகர்களின் நடத்தை தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு – நடவடிக்கை எடுத்த அறநிலையத் துறை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் ஜூலை 2-ம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது.

கும்பாபிஷேக பணிகளுக்காக கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் சிலர், உதவி அர்ச்சகர் கோமதிவிநாயகத்தின் வீட்டில் தங்கியிருந்தனர். அப்போது, அவர்கள் மது அருந்தி ஆபாசமாக நடனமாடியதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. இந்த வீடியோவை கோயிலின் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரனின் மகன் சபரிநாதன் பதிவு செய்து, அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாக குழுவினருக்கு வழங்கியதாகத் தெரிகிறது.

மேலும், கோயில் வளாகத்தில் பணியாற்றும் சில பெண்கள் மீது விபூதி தூவி விளையாடும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இதனைக் தொடர்ந்து, கோமதிவிநாயகம், சபரிநாதனை காவல் நிலையத்தில் அவதூறு புகார் அளித்துள்ளார். இதேசமயம், இந்து முன்னணி அமைப்பினர், சம்பந்தப்பட்ட அர்ச்சகர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கையுடன் புகார் மனுவும் அளித்துள்ளனர்.

15-ம் தேதி, முக்கிய அர்ச்சகரான சுந்தர் மது அருந்திய நிலையில் கோயிலில் பணியாற்றியதும் மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, ஆண்டாள் கோயில் செயல் அலுவலரான சக்கரையம்மாள் மற்றும் ஜோதிலட்சுமி ஆகியோர் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், கோமதிவிநாயகம் உள்ளிட்ட நால்வரும் கோயில் பணிகளில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், அவர்கள் பூஜை தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர் சுந்தருக்கு எதிரான நடவடிக்கை கும்பாபிஷேக விழாவிற்குப் பின்னர் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

விசாரணையை முடித்தவுடன் கோயிலைவிட்டு வெளியே வந்த அர்ச்சகர்கள் மீது, பக்தர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாகவும், இதுகுறித்து ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Comments Box