இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க அனுமதி கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க வசதி செய்ய கோரிய மனுவை எதிரொலியாகக் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த கைதி சுஜாந்தன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “நான் 2020ஆம் ஆண்டு ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். அங்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமற்றதாக இருப்பதால் அது எனது உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. என் கைது தொடர்பாக இலங்கை தூதரகத்திற்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, எனக்கு இலங்கை தூதரக அதிகாரிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்யும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவு வழங்கப்பட வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் எஸ். நதியா, “அந்த நபர் இலங்கை பிரஜையாவதால், அவரது கைது குறித்து இலங்கை தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்காதது வியன்னா ஒப்பந்தத்தை மீறும் செயல்,” என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில் சிறை நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் அரசுத் துணை வழக்கறிஞர் இ. ராஜ்திலக், “அந்நாட்டு தூதரகத்துடன் தொடர்பு கொள்வது மத்திய அரசின் பொறுப்பாகும்,” என்று கூறினார்.

வழக்கை தொடர்ந்து விசாரித்த நீதிபதிகள், “இலங்கையில் நமது நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும்போது தூதரகத்தைச் சந்திக்க அனுமதி கோருகிறோம். அதேபோல், இங்கே உள்ள இலங்கை பிரஜைக்கும் தூதரகத்தினரைக் காண வழிவகை செய்யப்பட வேண்டும். கைதியின் கைது குறித்து இலங்கை தூதரகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதா என்பதைக் குறித்து சிறை நிர்வாகம் பதிலளிக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து, ஜூலை 10-ம் தேதிக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Facebook Comments Box