தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்களைச் சேர்ந்தவர்களுக்கெதிரான ஊழல் வழக்குகளின் விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை, தவெக சென்னை மண்டலத்தின் வழக்கறிஞர் பிரிவில் இணை செயலாளராக உள்ள ஆதித்ய சோழன் முன்வைத்துள்ளார். அவர் மனுவில் கூறியுள்ளதாவது:
“தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கிணங்க, கடந்த ஆண்டு நவம்பரில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விண்ணப்பம் அளித்து, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பதிவு செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் விவரங்களை வெளியிடுமாறு கேட்டிருந்தேன்.
அத்துடன், அந்த வழக்குகளுக்கான முதல் தகவல் அறிக்கைகள் (FIR) என்ன நிலையில் உள்ளன என்பதைப் பற்றிய விவரங்களையும் அளிக்குமாறு கோரியிருந்தேன். எனது இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், மேல்முறையீடாக மாநில தகவல் ஆணையத்தில் மனுவும் தாக்கல் செய்தேன். இருப்பினும், இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல்களை மறுப்பது என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். எனவே, எனது கோரிக்கையில் உள்ள விவரங்களை அளிக்க மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்மனு விரைவில் விசாரணைக்காக எடுக்கப்படும் என நம்பப்படுகிறது.