நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று (ஆக. 05) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக அதிக கனமழை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தீவிர கனமழை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய நிலை உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி – தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி, தெற்கு இந்தியா முழுவதும் ஒரு மேலடுக்கு சுழற்சி, தெற்கு கேரளா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி, ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது.

இதன் காரணமாக, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் வலிமையான காற்று வீச வாய்ப்பு உள்ளது.

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் சில இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யலாம். தேனி, தென்காசி மாவட்டங்களில் தீவிர கனமழை, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை இருக்கக்கூடும்.

நாளைய (ஆக. 06) வானிலை:

தமிழகத்தின் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நீலகிரி மற்றும் கோவை மலைப்பகுதிகளில் கனமழை முதல் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஆக. 07ம் தேதியன்று:

வட தமிழகம் முழுவதிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மலைப்பகுதிகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கனமழை இருக்க வாய்ப்பு உள்ளது.

ஆக. 08 மற்றும் 09ம் தேதிகளில்:

வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆக. 11 மற்றும் 12ல் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை இருக்க வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர வானிலை:

இன்று வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 34°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27°C இருக்கும்.

நாளையும் அதேபோன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27°C இருக்கலாம்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் இன்று முதல் ஆக. 07 வரை மணிக்கு 40-50 கிமீ வேகத்திலும், இடையே 60 கிமீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று முதல் ஆக. 07 வரை, மற்றும் ஆக. 09 அன்று தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் 40-50 கிமீ வேகத்தில், இடையே 60 கிமீ வரை காற்று வீசும்.

அரபிக்கடலில் இன்று மற்றும் நாளை மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில், மேலும் மத்தியகிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா-கேரளா கடலோரம், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளில் 45-55 கிமீ வேகமும் இடையே 65 கிமீ வரை வேகமும் கொண்ட காற்று வீசக்கூடும்.

ஆக. 07 முதல் 09 வரை மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலில் 45-55 கிமீ வேகத்தில், இடையே 65 கிமீ வரை சூறாவளிக்காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Facebook Comments Box