கவின் கொலை வழக்கு: தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் விசாரணை நடத்தியது

திருநெல்வேலியில் மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான குழு நேரில் விசாரணை மேற்கொண்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியில் வசித்து வந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த இளைஞரான கவின் செல்வகணேஷ், கடந்த ஜூலை 27ஆம் தேதி திருநெல்வேலி கே.டி.சி நகரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில், அவரது காதலி என கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சுர்ஜித்தின் பெற்றோர், தமிழக சிறப்பு காவல்படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகிய இருவர்மீதும் வழக்கு பதியப்பட்டு, இருவரும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் குழு, திருநெல்வேலியிலும், தூத்துக்குடி மாவட்டத்தின் ஆறுமுகமங்கலத்திலும் நேரில் சென்று விசாரணை செய்தது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமார், காவல் அதிகாரி சாமுண்டீஸ்வரி, மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, துணை ஆணையர்கள் வினோத் சாந்தாராம், பிரசன்னகுமார், வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அனிதா மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்கள் பூங்கொடி, பென்னட் ஆசீர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, தேசிய ஆதிதிராவிடர் ஆணைய குழுவினர், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் உள்ள கவின் செல்வகணேஷின் இல்லத்துக்குச் சென்று அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

Facebook Comments Box