பொது இடங்களில் கொடிக்கம்பங்கள், கட்-அவுட்கள் அமைப்பதற்கான தனி விதிமுறைகள் – உயர்நீதிமன்றம் யோசனை
பொது இடங்களில் கட்சிக் கொடிக்கம்பங்கள் மற்றும் கட்-அவுட்கள் அமைப்பதை கட்டுப்படுத்த, தனி வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றக் கோரி தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அதிமுக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், தவெக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஆர். விஜயகுமார் மற்றும் சவுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
இடையீட்டு மனுக்களில் அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில், “பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றக் கூடாது. பட்டா நிலங்களில் கட்சிக் கொடிகள் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.
அரசு தரப்பில் “கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அரசு தயார்” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்:
“இந்த விவகாரத்தை பொதுநல நோக்கில் அணுகுகிறோம். அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்களை போக்குவரத்து பாதிக்காதவாறு அமைக்க வேண்டும். இதற்கான தனி வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வகுக்கப்பட வேண்டும்.
அதே போல, சில நடிகர்களையும், அரசியல் கட்சி தொண்டர்களையும் 60 அடி உயரமான கட்-அவுட்களில் அமைத்து, அதற்குப் பாலபிஷேகம் செய்கிறார்கள். எனவே, கட்-அவுட்கள் அமைப்பதற்கும் தனி விதிமுறைகள் தேவைப்படுகிறது.”
மேலும், இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்த கட்சிகள் மற்றும் அமைப்புகள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். அந்த பதில் மனுக்களை அரசு தரப்புக்கும் வழங்க வேண்டும்.
அதே நேரத்தில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல், பூங்கா போன்ற பொது இடங்களில் கட்சிக் கொடிக்கம்பங்களுக்கு தனி இடம் ஒதுக்குவதற்கான வாய்ப்பை பற்றியும் அரசு தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இந்த வழக்கின் தொடர்ச்சியான விசாரணை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.