பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் இன்று அறிமுகப்படுத்துகிறார்
பள்ளிக்கல்வி துறைக்கு உரிய மாநில கல்விக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்.
மத்திய அரசின் 2020-ம் ஆண்டு புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக, தமிழகத்துக்கே உரிய தனிப்பட்ட கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு கடந்த 2022-ல் அமைக்கப்பட்டது. துணைவேந்தர்கள், கல்வி நிபுணர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரிடம் கருத்துக்களை பெறும் பணியில் இந்த குழு ஈடுபட்டது.
இதன்படி, மாநில கல்விக் கொள்கையின் 650 பக்க வரைவு அறிக்கை கடந்த 2023 அக்டோபரில் தயாரிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி தமிழக அரசிடம் இந்த அறிக்கை வழங்கப்பட்டது. இந்நிலையில், முதற்கட்டமாக பள்ளிக்கல்வி துறைக்கு உரிய மாநிலக் கல்விக் கொள்கையை முதலமைச்சர் இன்று வெளியிட உள்ளார்.
‘‘மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கை உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இப்போது வெளியிடப்படுவது பள்ளிக்கல்விக்கான அறிக்கை ஆகும். இதில் சாத்தியமான திட்டங்கள் தற்போதைய கல்வி ஆண்டிலேயே செயல்படுத்தப்படும்’’ என்று பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.