இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ச்சியான போராட்டம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்த உள்ளனர்.

சனிக்கிழமை காலை, ராமேசுவரத்திலிருந்து கடலுக்கு சென்ற டல்லஸ் என்பவரின் விசைப்படகு மன்னார் வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் எல்லையை மீறி அந்த படகை சிறைபிடித்தனர். படகில் இருந்த டல்லஸ் (56), சிலைடன் (26), அருள் ராபர்ட் (53), லொய்லன் (45), ஆரோக்கிய சான்ரின் (20), பாஸ்கர் (45), ஜேசு ராஜா (32) ஆகிய 7 மீனவர்களுக்கு எல்லை மீறி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிபதி 7 மீனவர்களையும் ஆகஸ்ட் 21 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தற்போது அவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதன்பின், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் அருகே மீனவ பிரதிநிதி சேசுராஜா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த 50 நாட்களில் 64 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும், 24 பேர் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றிருப்பதும் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆகஸ்ட் 12 முதல் வேலை நிறுத்தப் போராட்டம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் உண்ணாவிரதப் போராட்டம், ஆகஸ்ட் 19 ராமேசுவரத்தில் ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்ட தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும், இந்தியா-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை தமிழக மற்றும் மத்திய அரசுகள் வலியுறுத்தி தீர்மானம் எடுத்துள்ளதாக கூறப்பட்டது.

Facebook Comments Box