பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது – முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின விழாவில் வழங்கினார்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுக்கு, இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருது முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். மேலும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருதுகளும் வழங்கப்பட்டன.

சென்னையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் விருதுகள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. அதில், ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற காதர் மொகிதீனுக்கு ரூ.10 லட்சம் பணம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இஸ்ரோ தலைவர் நாராயணன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது பெற்றார். துளசிமதி முருகேசனுக்கு துணிவு, சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. இவ்விருதுகளுடன் தலா ரூ.5 லட்சம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

நல்ஆளுமை விருதுகள்:

சமூக பங்களிப்பால் மாற்றத்தை ஏற்படுத்தும் பிரிவில், உதவி காவல் கண்காணிப்பாளர் வி. பிரசன்ன குமார், வட்டாட்சியர் ப. பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வீ. யமுனா விருது பெற்றனர்.

கட்டிட வரைபட அனுமதியை எளிமையாக்கியதற்காக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி செயலர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு இயக்குநர் பா. கணேசன் ஆகியோர் விருது பெற்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக செயலர் க. லஷ்மி பிரியா, ஆணையர் த. ஆனந்த், இயக்குநர் ச. அண்ணாதுரை, தாட்கோ இயக்குநர் க. சு. கந்தசாமி ஆகியோர் குழு விருது பெற்றனர்.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலம் அமைத்ததற்காக நெடுஞ்சாலைத் துறை செயலர் இரா. செல்வராஜ் விருது பெற்றார். தமிழ் இணையக் கல்வி கழகத்தின் இணை இயக்குநர் ஆர். கோமகனுக்கும் (தமிழை உலகளவில் மேம்படுத்தியதற்காக) விருது வழங்கப்பட்டது.

மற்ற விருதுகள்:

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சேவைக்காக –

  • திருச்சி குமரவேல் சண்முகசுந்தரத்துக்கு சிறந்த மருத்துவர் விருது
  • எக்காம்வெல் மறுவாழ்வு மையத்துக்கு சிறந்த நிறுவனம் விருது
  • கோவை குணசேகரன் ஜெகதீசனுக்கு சிறந்த சமூகப் பணியாளர் விருது
  • பெல் பிரின்டர்ஸ் நிறுவனத்துக்கு மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு வழங்கியதற்கான விருது வழங்கப்பட்டன.

மகளிர் நலனுக்காக சிறப்பு தொண்டு புரிந்த பிரிவில் –

  • சென்னை பாகீரதி ராமமூர்த்தி, விருதுநகர் க. மாரிமுத்து ஆகியோர் சிறந்த சமூக சேவகர் விருது
  • சென்னை கருணாலயா சமூக சேவை நிறுவனம், திருச்சி சொசைட்டி ஃபார் எஜுகேஷன் வில்லேஜ் ஆக்‌ஷன் & இம்ப்ரூவ்மென்ட் ஆகியவை சிறந்த தொண்டு நிறுவனம் விருது பெற்றன.

உள்ளாட்சி விருதுகள்:

  • சிறந்த மண்டலம் – சென்னை மாநகராட்சி (6, 13வது மண்டலங்கள்)
  • சிறந்த மாநகராட்சிகள் – ஆவடி, நாமக்கல்
  • சிறந்த நகராட்சிகள் – ராஜபாளையம், ராமேசுவரம், பெரம்பலூர்
  • சிறந்த பேரூராட்சிகள் – உத்திரமேரூர், காட்டுப்புத்தூர், நத்தம்

இளைஞர் விருதுகள்:

ஆண்கள் பிரிவில் விழுப்புரம் சந்துருகுமார், திருநெல்வேலி ஜெயக்குமார், சேலம் மாரியப்பன் தேர்வு செய்யப்பட்டனர். பெண்கள் பிரிவில் சென்னை காஜிமா, புதுக்கோட்டை லாவண்யா, கிருஷ்ணகிரி கவுரி விருது பெற்றனர்.

பின்னர், விருதாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Facebook Comments Box