”அமெரிக்க வரி உயர்வால் தமிழகத்துக்கு பாதிப்பு” – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தல்

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு விதித்த கூடுதல் இறக்குமதி வரி காரணமாக தமிழகம் அதிக பாதிப்புகளை எதிர்கொள்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்காக முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்:

“இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்திற்கான ஒன்றிய அரசின் முயற்சிகளை பாராட்டுகிறேன். தேசிய நலன்களைப் பாதுகாக்கும் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன். அமெரிக்க அரசு விதித்த 25% வரி மற்றும் தொடர்ச்சியாக 50% வரி உயர்வு காரணமாக கடுமையான தாக்கங்கள் ஏற்படுவதால், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கவலை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

கடந்த நிதியாண்டில், இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு $433.6 பில்லியனில் 20% அமெரிக்காவிற்கு சென்றது. அதே போல், தமிழ்நாட்டின் $52.1 பில்லியன் பொருட்களில் 31% அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க சந்தைக்கு அதிகமாக சார்ந்துள்ளதால், வரி தாக்கம் தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களைவிட அதிகமாக இருக்கும். இது உற்பத்தித் துறை மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல்ஸ், ரத்தினக் கற்கள், நகைகள், தோல், காலணிகள், கடல் பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் துறைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த துறைகள் அதிக தொழிலாளர்களை சார்ந்துள்ளதால், எந்தவொரு ஏற்றுமதி மந்தநிலை கூட விரைவில் பெருமளவு பணி இழப்புகளுக்கு வழிவகுக்கும். 2024–25 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு 28% பங்களித்தது. இதனால் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

பாதிக்கப்பட்ட துறைகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, ஜவுளித் துறையில் இரண்டு முக்கிய நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன:

  1. மனிதனால் உருவாக்கப்பட்ட இழை மதிப்புச் சங்கிலி ஜிஎஸ்டி விகித முரண்பாடுகளை நீக்கி, தலைகீழ் வரி கட்டமைப்பை சரிசெய்தல்;
  2. முழு சங்கிலியையும் 5% ஜிஎஸ்டி அடுக்குக்குள் கொண்டு வருதல் மற்றும் பருத்திக்கு இறக்குமதி வரியில் விலக்கு அளித்தல்.

மேலும், அவசரக் கடன் உத்தரவாதத் திட்டத்தில் (ECLGS) 30% பிணையமில்லாத கடன்களை 5% வட்டி மானியம் மற்றும் இரண்டு ஆண்டு தற்காலிக தடையுடன் திருப்பிச் செலுத்துதல், RoDTEP நன்மைகளை 5% ஆக உயர்த்துதல், நூல் உட்பட அனைத்து ஜவுளி ஏற்றுமதிகளுக்கும் முன் மற்றும் பின் கடனை நீட்டித்தல் ஆகியவை ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கைகள்.

உலகளாவிய வர்த்தகத்தில் சுங்கவரி தாக்கங்கள் மற்றும் போட்டி அழுத்தங்கள் மற்ற துறைகளுக்கும் உள்ளதால், உடனடி நிவாரணம், பணப்புழக்க மேம்பாடு, செலவுச் சுமை குறைப்பு, சிறப்பு வட்டி மானியத் திட்டம் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை விரைவுபடுத்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியம்.

முக்கியமாக, கோவிட் பெருந்தொற்றுக் காலத்திலும் செய்யப்பட்ட அசலைத் திருப்பிச் செலுத்தும் சலுகை போன்ற சிறப்பு நிதி நிவாரணங்கள் தமிழ்நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். பல துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

பிரதமர் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் தொழில்துறையினர் உடனடியாக கலந்தாலோசனை நடத்தி, வர்த்தகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழு ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்

Facebook Comments Box