சென்னையில் எம்எல்ஏ விடுதிக்குள் அத்துமீறியதாக அமலாக்கத் துறை மீது போலீஸ் வழக்குப் பதிவு

எம்எல்ஏக்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனைகள் நடத்தினர். சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடத்தியபோது, பூட்டப்பட்டிருந்த ஒரு அறையை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் அமைச்சர் பெரியசாமியின் மகன், எம்எல்ஏ ஐ. பி. செந்தில்குமாருக்கு ஒதுக்கப்பட்ட அறையிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அறை பூட்டப்பட்டிருந்ததால், அதிகாரிகள் நீண்ட நேரம் வெளியே காத்திருந்தனர். சுமார் நான்கு மணி நேரம் காத்திருந்த நிலையில், சட்டப்பேரவை செயலர் கி. சீனிவாசனுடன் ஆலோசனை நடத்தி, அதன் பின்னர் அறை திறந்து சோதனை செய்தனர்.

மேலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமியின் அறையிலும் சோதனை நடத்தப் போவதாக தகவல் வெளியானதால், அந்த அறை பூட்டப்பட்டு யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டது.

இந்நிலையில், எம்எல்ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சட்டப்பேரவை செயலர் கி. சீனிவாசன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Comments Box