முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 1,996 பணியிடங்களுக்கு 2.36 லட்சம் பேர் விண்ணப்பம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் மொத்தம் 1,996 காலியிடங்களை நிரப்ப 2 லட்சத்து 36 ஆயிரத்து 390 பேர் போட்டியிட உள்ளனர். இந்த தேர்விற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) போன்ற பதவிகளை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 10-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற்றது.
விண்ணப்பங்களில் பிழைகளை திருத்திக் கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு அளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் வந்தன. அதன்படி, ஆகஸ்ட் 13 முதல் 16 வரை ஆன்லைன் விண்ணப்பங்களில் தேவையான திருத்தங்களைச் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த அவகாசத்தை பயன்படுத்தி பலர் தேர்வு மைய மாற்றம் மற்றும் சான்றிதழ் விவரங்களில் இருந்த பிழைகளைச் சரி செய்தனர்.
இதற்கிடையில், மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 390 பேர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்படி, 1,996 காலியிடங்களுக்கு ஒரே இடத்துக்கு சராசரியாக 112 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்வு கடைசியாக 2022 பிப்ரவரியில் நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வு நடத்தப்படுவதால், இந்த முறை அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் பிஎட் முடித்த முதுகலை பட்டதாரிகள் அதிக அளவில் விண்ணப்பித்திருப்பது காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000-க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தேர்வர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.