“தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு ஒதுக்கீடு சட்டம் கொண்டு வாருங்கள்” – அன்புமணி ராமதாஸ்
தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் உருவாகும் தனியார் தொழில் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனால் தான், தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார் தயாரிப்பு ஆலையில் 200 தமிழர்களுக்கு வேலை கிடைத்திருப்பதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். ஆனால் இது சாதனை அல்ல, தோல்வியே.
அந்த நிறுவனத்தில் வெளிமாநிலத்தவர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என நிறுவனம் விரும்பியதாகவும், தமிழக அரசு நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு தான் தமிழர்களுக்கு வேலை கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மொத்தம் 3,500 பேருக்கு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட அந்த ஆலையில், தற்போது ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். ஆனால், அதில் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு வெறும் 200 தான்; அதாவது 20% மட்டுமே. மண்ணின் மக்களிடம் இருந்து 400 ஏக்கர் நிலம் எடுத்து நிறுவப்பட்ட ஆலைவில், தமிழர்களுக்கு வெறும் 200 வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பது, தமிழக அரசின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில், தொழிற்சாலைகளில் 75% வேலைவாய்ப்பை தமிழர்களுக்கு வழங்கும் சட்டம் கொண்டு வருவதாக திமுக வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருந்தால், வின்ஃபாஸ்ட் நிறுவனத்திடம் அரசு இவ்வாறு கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அந்த சட்டம் இருந்திருந்தால், குறைந்தபட்சம் 750 தமிழர்கள் தற்போது அந்த ஆலையில் பணிபுரிந்திருப்பார்கள்.
அதேபோல், திமுக ஆட்சிக்கு வந்த பின் கையெழுத்திடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களில் 77% நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும், 2024 உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் 80% செயல்பாட்டில் வந்துவிட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இவை அனைத்தும் பொய்யான புள்ளிவிவரங்கள். உண்மையில், திமுக ஆட்சியில் இதுவரை 50 தொழிற்சாலைகள்கூட துவங்கப்படவில்லை. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களை நியாயப்படுத்துவதற்காகவே இவ்வாறு தவறான தகவல்கள் கூறப்படுகின்றன.
2021-க்குப் பிறகு கையெழுத்திடப்பட்ட 900-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் எத்தனையவை நடைமுறைக்கு வந்துள்ளன, அவற்றில் எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்த முழுமையான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.
தமிழர்களுக்கு தொழிற்சாலைகளில் உரிய வேலைவாய்ப்பு கிடைக்கவும், தனியார் நிறுவனங்களில் 75% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக இயற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.