சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் தேர்தல்: திமுகவை சேர்ந்த கவுசல்யா வெற்றி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக 9, அதிமுக 12, மதிமுக 2, காங்கிரஸ் 1, எஸ்டிபிஐ 1, சுயேச்சைகள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றனர். நகராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் முத்துலெட்சுமி, திமுக சார்பில் உமா மகேஸ்வரி போட்டியிட்டனர். இருவரும் தலா 15 வாக்குகள் பெற்று சமநிலை ஏற்பட்டதால், குலுக்கல் முறையில் உமா மகேஸ்வரி நகராட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர், நகராட்சி தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் உள்பட 24 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு அளித்தனர். அதன்படி ஜூன் 2 ஆம் தேதி குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்த 30 உறுப்பினர்களில் 28 கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் காரணமாக உமா மகேஸ்வரி தலைவர் பதவியை இழந்ததாக அறிவிக்கப்பட்டு, அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உமா மகேஸ்வரி மனு தாக்கல் செய்து, குரல் வாக்கெடுப்பு செல்லாது எனக் கோரினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 17 அன்று மறைமுக வாக்கெடுப்பு நடத்தவும், முடிவுகளை ஜூலை 18 அன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. அதன்படி 28 கவுன்சிலர்கள் ஆதரவாக வாக்களித்ததால், மறைமுக வாக்கெடுப்பிலும் உமா மகேஸ்வரி பதவி இழந்தார்.

இதையடுத்து, காலியாக இருந்த நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. நகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. திமுக சார்பில் 6வது வார்டு உறுப்பினர் கவுசல்யா, அதிமுக சார்பில் 26வது வார்டு உறுப்பினர் அண்ணாமலை புஷ்பம் போட்டியிட்டனர். முன்னாள் தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் திமுக உறுப்பினர் ஒருவர் வாக்களிக்கவில்லை. மீதமுள்ள 28 பேர் வாக்களித்தனர்.

நகராட்சி ஆணையாளர் சாம் கிங்ஸ்டன் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டதில் திமுகவை சேர்ந்த கவுசல்யா 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த அண்ணாமலை புஷ்பம் 6 வாக்குகள் பெற்றார்.

Facebook Comments Box