“தராதரம் அவ்வளவுதான்…” – முதல்வரை ‘அங்கிள்’ என விமர்சித்த விஜய் மீது கே.என்.நேரு காட்டம்

திருச்சியில் செய்தியாளர்களுடன் பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, “தமிழக முதல்வரை தரம் தாழ்த்தி விமர்சிப்பது தவெக தலைவர் விஜய்க்கு அழகல்ல. அவருக்கு தேர்தலில் பதில் சொல்வோம்” என்று கூறினார்.

அவர் மேலும், “மதுரை மாநாட்டில், விஜய் தமிழக முதல்வரை ‘அங்கிள்’ என விமர்சித்துள்ளார். அவரது தராதரம் இவ்வளவு. ஒரு மாநில முதல்வரை, பெரிய கட்சியின் தலைவரை, 50 ஆண்டுகள் அரசியலில் அனுபவம் கொண்டவரை இன்று புதியவர் தரம் தாழ்த்து விமர்சிப்பது சரியில்லை. 50 பேர் கூடிவிட்டதால் எந்தவிதமும் பேசுவது ஒத்ததாகாது. மக்களும் நாங்களும் தேர்தலில் சரியான பதிலை கொடுக்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், “முதல்வர் ஸ்டாலினை விஜய் ‘மாமா’ அல்லது ‘அங்கிள்’ என்று கூப்பிடுவது தவறில்லை. அவர் 2026 தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் போட்டி என்று குறிப்பிட்டுள்ளார். திமுகவுடன் போட்டியிட எங்களுக்கு தகுதியில்லை என்பதற்கில்லை; ஆளும் கட்சியை விமர்சிக்க விரும்பும் எதிர்க்கட்சிகளுக்கு பதிலை மக்கள் தேர்தலில் அளிப்பார்கள்” என்று கூறினார்.

முன்னதாக, மதுரை மாநாட்டில் விஜய் பேசிய போது, “தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் வெற்று விளம்பர மாடல் திமுக, பாஜகவை மறைமுகமாக ஆதரிக்கிறது. ஆட்சியில் இல்லாவிட்டால் போங்க மோடிங்குறது, ஆட்சிக்கு வந்துவிட்டால் வாங்க மோடிங்குறது. டெல்லியில் சீக்ரெட் மீட்டிங் நடத்துகிறார்கள். ‘ஸ்டாலின் அங்கிள் வாட் அங்கிள், இட்ஸ் வெரி ராங் அங்கிள்’. தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால், அதை செய்தது மு.க.ஸ்டாலின் அங்கிளாக இருந்தாலும் கேள்வி கேட்பேன். நீங்கள் நேர்மையான ஆட்சி நடத்துகிறீர்களா? பெண்களுக்கு ரூ.1000 கொடுத்தீர்களா? அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று சொன்னதெல்லாம் செய்யப்படுகிறதா?” என கேள்விகள் எழுப்பியது குறிப்பிடத்தக்கது

Facebook Comments Box