போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணிகளுக்கான வசதிக்காக 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்
சென்னை விமான நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால், பயணிகள் சிரமமின்றி விமானங்களை அடைய 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
நேற்று காலை பல்லாவரம் மேம்பாலம் அருகே தனியார் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக குரோம்பேட்டை–விமான நிலையம் இடையே ஜிஎஸ்டி சாலையில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை நின்றன. இதனால் அலுவலகம், கல்லூரி செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, விமான நிலையத்தை அடைய முயன்ற பயணிகள் சிக்கலில் சிக்கினர். பலர் தாங்கள் பயணிக்க இருந்த விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட விமான நிறுவனங்கள், பயணிகள் தாமதமின்றி வந்து சேர வசதியாக புறப்பாட்டை மாற்றின. அதன்படி, சென்னை விமான நிலையத்திலிருந்து குவகாத்தி, ஹைதராபாத், தூத்துக்குடி, கொல்கத்தா, புனே, ராஜமுந்திரி, மதுரை, கோலாலம்பூர், மஸ்கட், இலங்கை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இருந்த 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் அரைமணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டன.