முதியோர்களுக்கான உதவி மையம் – பிள்ளைகளால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கும் சென்னை போலீஸ்

சென்னை போலீசார் முதியோர்களுக்கு உதவுவதற்காக சிறப்பு உதவி மையத்தை அமைத்து வருகின்றனர். இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உதவ, சென்னை காவல் துறையில் 1252 என்ற தொலைபேசி எண்ணுடன் முதியோர் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு சேவை செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு “பந்தம்” எனும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் 94999 57575 என்ற எண்ணிற்கு அழைத்தால், தனிமையில் வாழும் முதியோர்களுக்கு உடனடி உதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக,

  • பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள்,
  • வெளிநாடுகளில் பிள்ளைகள் வசிப்பதால் தனித்து வாழும் முதியோர்கள்,
  • வாரிசு இல்லாத முதியோர்கள் ஆகியோரின் அழைப்புகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அவர்களுக்கு மருத்துவ உதவி, பாதுகாப்பு, சட்ட ஆலோசனை உள்ளிட்ட தேவைகள் போலீஸார் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. இந்த ஆண்டில் மட்டும், பந்தம் மையம் வழியாக மொத்தம் 1,191 அழைப்புகள் பெறப்பட்டு, 72 மணி நேரத்துக்குள் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், 185 அழைப்புகளுக்கு சட்டரீதியான உதவி, 6 பேருக்கு மருத்துவ உதவி, 5 பேருக்கு பாதுகாப்பு ஏற்பாடு, 41 பேருக்கு அத்தியாவசிய உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 954 பேருக்கு தகவல் மற்றும் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டுள்ளது.

இதோடு, “காவல் கரங்கள்” உதவி மையம் மூலம் இந்த ஆண்டில் 646 ஆதரவற்ற முதியவர்கள் மீட்கப்பட்டு தகுந்த முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதில் 117 பேரின் முகவரிகள் கண்டறியப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Facebook Comments Box