வைகை அணை கொள்ளளவை எட்டியதால் நீர்ப்பிடிப்பு கிராமங்களில் வெள்ளப்பெருக்கு!
வைகை அணையின் நீர்மட்டம் தற்போது முழுக் கொள்ளளவை நெருங்கியுள்ளது. இதன் விளைவாக அணை நீர் தேங்கிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் புகுந்து, சாலைகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வைகை அணையின் சுற்றிலும் சுமார் 21 கிலோமீட்டர் பரப்பளவில் நீர் தேங்குகிறது. முழுக் கொள்ளளவான 71 அடியை எட்டும்போது அரப்படித்தேவன்பட்டி, கருப்பத்தேவன்பட்டி, குன்னூர், வைகைப்புதூர், கீழக்காமக்காபட்டி போன்ற பல கிராமங்கள் வரை நீர் பரவி, ஏரிக்கரை போல் காட்சியளிக்கும்.
கடந்த 5ஆம் தேதி தொடர்ச்சியான நீர்வரத்தால் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், மூன்றாம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது நீர் சேமிப்பிற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இன்று நீர்மட்டம் 69.70 அடியை எட்டியுள்ளது. முழுக் கொள்ளளவை நெருங்கியதால், அணையைச் சுற்றியுள்ள கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.
குறிப்பாக பெரியகுளம் ஒன்றியத்தில் சர்க்கரைப்பட்டி–மேலக்காமக்காபட்டி இடையே சாலை முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அந்தப் பாதையில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் காளவாசல், மயானம் வழியாக உள்ள குறுக்குப்பாதையைப் பயன்படுத்தி சென்று வருகின்றனர்.
அவசர தேவைக்கான ஆம்புலன்ஸ் கூட அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மேலக்காமக்காபட்டி, கீழக்காமக்காபட்டி பகுதிவாசிகள் வடுகபட்டி வழியே சுற்றுப்பாதை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற பெண் தெரிவித்ததாவது:
“அணை நீர்மட்டம் உயரும் போதெல்லாம் இச்சாலையில் வெள்ளம் புகுந்து விடுகிறது. நீர் குறையும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. மாற்றுப்பாதையில் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் கிடையாது. இதனால் சர்க்கரைப்பட்டி, சாவடிபட்டி, மேல–கீழ காமக்காபட்டி உள்ளிட்ட பல கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆகவே இச்சாலையில் அவசரமாக பாலம் அமைக்க வேண்டும்” என்றார்.