மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா – தற்காலிக நீக்கம்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில், முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா (செப்டம்பர் 15, காஞ்சிபுரம்) தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா பங்கேற்றார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை, வீரவாள் வழங்கினர். மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கை மாவட்டங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கான புதிய நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, “வரும் செப்டம்பர் 15 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழாவில், வைகோவுக்கு திராவிட ரத்னா விருது வழங்க உள்ளோம். அவர் அதை பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு கட்சி சார்பில் 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என கடிதம் வந்துள்ளது. நான் உடனே நேரில் சென்று விளக்கம் அளிக்கத் தயார். நாள், நேரத்தை வைகோ அறிவிக்க வேண்டும்” எனக் கூறினார்.

இதற்கிடையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்ட கடிதத்தில்,

“கட்சியின் சட்ட விதிகளை மீறி ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், மல்லை சி.ஏ. சத்யா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார்.

கட்சியின் உடமைகள், கணக்குகள், ஏடுகள், பொறுப்புகள் அனைத்தையும் பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும். மல்லை சத்யாவின் கருத்துகளுக்கும், செயல்பாடுகளுக்கும் கட்சி பொறுப்பு ஏற்காது. அவர் மதிமுக கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. மேலும், தலைமை நிர்வாகிகள் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box