“புதுச்சேரிக்கு காங்கிரஸால் மட்டுமே மாநில அந்தஸ்து கிடைக்கும்” – நாராயணசாமி
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் வல்லமை காங்கிரஸுக்கே உண்டு, பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியால் அது சாத்தியமில்லை என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
“புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்து கோரிக்கையை பிரதமரிடம் வலியுறுத்தினால் அது கிடைக்கும் என பாஜக மாநில தலைவர் கூறியுள்ளார். ஆனால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தீர்மானம் சட்டமன்றத்தில் ஏற்கனவே 10 முறைக்கும் மேலாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரங்கசாமி தனது தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து பெறுவதே குறிக்கோள் என அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே பாஜக தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தருவோம் என கூறியிருந்தார்.
காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்கும் எண்ணமே இல்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி, மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகின்றது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும், பாஜக மாநில தலைவர் முதல்வர் பிரதமரை சந்திக்க வேண்டும் என்கிறார். அப்படியானால், சட்டமன்ற தீர்மானத்தின் மதிப்பு என்ன? பாஜக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி எங்கே? இதிலிருந்தே பாஜகவுக்கு மாநில அந்தஸ்து வழங்கும் சிந்தனை இல்லை என்பது தெளிவாகிறது.
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக ஆட்சியில் மாநில அந்தஸ்து கிடைக்காது. 2026-ஆம் ஆண்டு இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அந்தஸ்தை வலியுறுத்தி பெற்றுக் காட்டுவோம். பாஜக தனது சாதனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால், மாநில அந்தஸ்து குறித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
பட்ஜெட்டை அமைப்பதில் தெரியாமல் காங்கிரஸ் ஆட்சியில் கடன் எடுத்ததாக பாஜக குற்றம்சாட்டுகிறது. அதேபோல், ரங்கசாமி ஆட்சியும் கடன் பெற்றே பட்ஜெட் அமைத்துள்ளது. மத்திய அரசு ரங்கசாமிக்கு ரூ.1,700 கோடி கடன் அளித்துள்ளது. இப்போது அவர் ரூ.4,750 கோடி ஆசிய வங்கியில் கடன் எடுத்து வருகிறார். இருந்தும் காங்கிரஸை குறைசொல்வது அரசியல் அறியாமைதான்.
புதிய கல்விக் கொள்கையால் கல்வித் தரம் உயர்ந்ததாகக் கூறுகின்றனர். ஆனால், இந்தி திணிப்பால் புதுச்சேரி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தரம் குறைந்ததோடு, மாணவர்கள் மன அழுத்தத்துக்கும் உள்ளாகிறார்கள். தமிழக பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு சுமை இல்லை. ஆனால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் சமீபத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்த சம்பவமே அதற்கு சாட்சி. இதனால் காங்கிரஸ் ஆட்சியில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.
அரசுப் பள்ளிகளில் 60 சதவீதத்துக்கும் மேல் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. ஆசிரியர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கான பயிற்சி வழங்கப்படவில்லை. இதனால் பள்ளிகளில் கற்பித்தல் சிரமமாகியுள்ளது. மத்திய அரசு 10 ஆயிரம் மாணவர்கள் இடைநிறுத்தம் செய்ததாகக் கூறியுள்ளது. இதற்குப் பொறுப்பேற்று கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும்.
புதுச்சேரி பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என கூறியுள்ளார். இதனால், அதிமுக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ளதா இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ரெஸ்டோ பாரில் மாணவர் படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். குடியிருப்பு ரெஸ்டோ பார்களை மூட வேண்டும் என்ற கோரிக்கையிலும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, துணை ஆளுநரை சந்தித்து ரெஸ்டோ பார்களை மூடவும், மாணவர் படுகொலைக்கு சிபிஐ விசாரணை கோரியும் மனு தர உள்ளோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் நாடுவோம்.
காவல்துறை பணம் கொடுத்தால்தான் வழக்கு பதிவு செய்கிறது. மாணவர் படுகொலைக்குச் சம்பந்தப்பட்ட பெண்ணை சீண்டியது யார் என்பதையும் டிஐஜி தெளிவுபடுத்த வேண்டும். முதல்வருக்கு நெருங்கியவர்கள் ரெஸ்டோ பார்களை நடத்துவதால், உண்மை வெளிவராமல் மறைக்க முயற்சிக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.