டிஜிபி நியமனத்தில் குழப்பம் நீடிப்பு; பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனுக்கு வாய்ப்பு

தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் வரும் 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, தற்காலிகமாக பொறுப்பு டிஜிபியாக மூத்த அதிகாரியை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய டிஜிபி யார் எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சீனியாரிட்டி பட்டியலில் முதலில் உள்ளவர்கள் சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆவர். தொடர்ந்து அபய்குமார் சிங், வன்னிய பெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கடராமன், வினித் தேவ் வான்கடே ஆகியோர் வரிசையில் உள்ளனர்.

வழக்கமாக, புதிய டிஜிபி நியமிக்கப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே தகுதியான 8 அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசு மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பும். அதிலிருந்து 3 பேர் பட்டியலை ஆணையம் திருப்பி அனுப்பும். பின்னர், அதிலிருந்து ஒருவரை அரசு தேர்வு செய்யும். ஆனால் இம்முறை அந்த நடைமுறை தொடங்கப்படவில்லை.

வரும் 8 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழக அரசு தங்களுக்கு சாதகமானவர் இருக்க வேண்டும் என விரும்புவதாக கூறப்படுகிறது. அதனால் சங்கர் ஜிவாலுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டாலும், அவர் 31ஆம் தேதி ஓய்வு பெறுவது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, பிரமோத்குமாருக்கு இன்னும் ஒரு மாதமே பதவிக்காலம் இருப்பதால், சீமா அகர்வால் அல்லது சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்படலாம் எனவும் பேசப்பட்டது. ஆனால் அதிலும் முடிவு எட்டப்படவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி அபய்குமார் சிங்கும் பொறுப்பு டிஜிபியாகலாம் எனக் கூறப்பட்டாலும் அதுவும் நிறைவேறவில்லை.

இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், “சட்டம்-ஒழுங்கு டிஜிபிக்கு பணிநீட்டிப்பு வழங்கக் கூடாது, பொறுப்பு டிஜிபி நியமிக்கக் கூடாது” என வழக்கு தொடரப்பட்டது. இதற்கு அரசு, “புதிய டிஜிபி நியமிக்கும் நடைமுறை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தது.

அதேநேரம், புதிய டிஜிபி நியமிக்கப்படும் வரை பொறுப்பு டிஜிபியை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி, தற்போது நிர்வாகப் பிரிவில் உள்ள டிஜிபி வெங்கடராமன் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்குவதால், 3 முதல் 6 மாதங்களுக்கு பின்னர் தேர்தல் ஆணையம் சட்டம்-ஒழுங்கு டிஜிபியை நியமிக்கலாம். அதுவரை பொறுப்பு டிஜிபி முறையே தொடரலாம் என தமிழக அரசு விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments Box