“காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்” – விவசாயிகளிடம் பழனிசாமி உறுதி

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தின் போது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று மண்ணச்சநல்லூர் தொகுதிக்குச் செல்லும் வழியில், திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்தில் விவசாயிகள் அவரை வரவேற்க காத்திருந்தனர்.

விவசாயிகளை கண்டதும் பேருந்தை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கிய பழனிசாமி, விவசாயிகள் ஒரு தட்டில் வைத்து வழங்கிய நெல் மணிகளையும் பூக்களையும் காவிரி ஆற்றில் தூவி வணங்கினார். அப்போது விவசாயிகள்,

“காவிரி மற்றும் துணை ஆறுகளை சுத்தப்படுத்தும் வகையில் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள். மத்திய அரசிடம் பேசி அந்த திட்டம் நிறைவேறுவதற்கு முன்னெடுப்பு செய்தீர்கள். அது நிறைவேறினால் சாயக்கழிவு, கழிவுநீர் போன்றவை ஆற்றில் கலப்பது தடுக்கப்படும். இதனால் நீரின் தரமும், ஆதாரமும் மேம்படும். மத்திய அரசுடன் இணைந்து அந்த திட்டத்தை கொண்டு வந்த உங்களுக்கு நன்றி. நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதை நிறைவேற்ற வேண்டும். மேலும் காவிரி ஆற்றில் தடுப்பணை அமைத்து நீர் சேமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு பதில் அளித்த பழனிசாமி,

“ஏற்கனவே ஆதனூர், குமாரமங்கலம் உள்ளிட்ட 2 இடங்களில் அதிமுக ஆட்சியில் தடுப்பணை கட்டியுள்ளோம். மேலும் 4 தடுப்பணைகள் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, முதற்கட்டப் பணிகள் தொடங்கிய நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்து வந்த திமுக அரசு திட்டத்தை கைவிட்டுவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், மேட்டூர் அணையில் இருந்து காவிரி கடலில் கலக்கும் வரை எங்கு தடுப்பணை அமைக்க முடியும் என்பதை ஆராய்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஏனெனில், தடுப்பணை அமைக்கும் போது அந்த இடத்திலுள்ள நிலங்களும் மக்களும் பாதிக்கப்படக் கூடாது. அதுபோன்ற இடங்களை ஆராய்ந்தே அமைக்க வேண்டும். முழுமையாக ஆய்வு செய்து தடுப்பணைகள் அமைத்துக் கொடுக்கிறேன்,” என்று கூறினார். பின்னர் அவர் பேருந்தில் ஏறி பயணத்தைத் தொடர்ந்தார்.

Facebook Comments Box