கல்வியில் தேசிய அளவில் முன்னிலை வகிக்கும் தமிழகம் – பள்ளிக்கல்வித் துறை சாதனைகள் குறித்து அரசின் பெருமிதம்

பல்வேறு புதுமையான திட்டங்களின் செயல்பாடுகளால், பள்ளிக் கல்வியில் தமிழகம் நாடு முழுவதும் முன்னணி வகிப்பதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:

தமிழகத்துக்கென தனித்த மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது சமத்துவம், அனைவருக்கும் சம வாய்ப்பு, எதிர்காலத் தேவைகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையிலான கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்ய “இல்லம் தேடிக் கல்வித் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது. 2021–22 கல்வியாண்டு முதல் ரூ.660.35 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் மூலம் 1.65 லட்சம் தன்னார்வலர்கள் உதவியுடன் 34 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர்.

அதேபோல், முதல்வரின் காலை உணவுத் திட்டம் தற்போது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் 17.53 லட்சம் மாணவர்களுக்கு 2024–25 கல்வியாண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்க வகுப்பு மாணவர்களின் அடிப்படை அறிவை மேம்படுத்த 25.08 லட்சம் குழந்தைகளுக்கு பயனளிக்கிறது. மாற்றுத் திறனாளி மாணவர்களை அடையாளம் கண்டு சிறப்புக் கல்வி வழங்க நலம் நாடி செயலி பயன்படுத்தப்படுகிறது.

அதே நேரத்தில், 76,56,074 மாணவர்களுக்கு ஆதார் புதுப்பித்தலும் புதிய ஆதார் பதிவும் பள்ளியிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. 28,067 அரசுப் பள்ளிகளில் 100 Mbps வேகத்தில் இணையவசதி வழங்கப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள பள்ளிகளில் இணைய இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுதவிர, 16.77 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.455 கோடி செலவில் 22,931 திறன்மிகு (Smart) வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடியில் டேப்லெட் கையடக்கக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தொழிற்கல்வி பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், வானவில் மன்றம் எனப்படும் நடமாடும் அறிவியல் ஆய்வகத் திட்டம் ரூ.11.69 கோடி செலவில் 33.50 லட்சம் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கிறது.

பள்ளி மேம்பாட்டுத் திட்டம் கீழ், 2022–23 மற்றும் 2023–24 கல்வியாண்டுகளில் 614 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.1,087.76 கோடி, 2,455 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்பட்டு வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

2024–25 கல்வியாண்டில் 440 மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.745 கோடி, 526 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.284 கோடி உட்கட்டமைப்பு வசதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பராமரிப்புக்கு ரூ.200 கோடி வழங்கப்பட்டுள்ளது.

2025–26 கல்வியாண்டிற்காக 567 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.734.55 கோடி, 182 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.110.71 கோடி, மேலும் பராமரிப்பிற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அனைத்து முயற்சிகளின் மூலமும், உயர்தர பள்ளிக் கல்வியை வழங்குவதில் தமிழகம் நாடு முழுவதும் முன்னிலை வகிக்கிறது என அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box