கொல்லம் – மதுரை ரயில்கள் சேவையில் நேர மாற்றம்: பயணிகள் சந்தோஷம்

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து 10 நிமிட இடைவெளியில் தென்காசி, சிவகாசி வழியாக மதுரை மற்றும் சென்னைக்கு ரயில்கள் தொடர்ச்சியாக புறப்பட்டதால், அவற்றின் நேரத்தை மாற்ற வேண்டும் என நீண்டநாள் கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில், கொல்லம் – சென்னை ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொல்லம் – சென்னை ரயில் சேவை 1904 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வந்தது. அகல ரயில் பாதை பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இந்த சேவை, 2018 ஆம் ஆண்டு முதல் மீண்டும் இயக்கம் பெற்றது. சென்னை – கொல்லம் விரைவு ரயில் (16102) தினசரி மதியம் 12 மணிக்கு கொல்லத்தில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.

மேலும், மதுரை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை – கொல்லம் எக்ஸ்பிரஸ், புனலூர் – குருவாயூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று ரயில்கள் இணைக்கப்பட்டு, 2023 ஆகஸ்ட் முதல் மதுரை – குருவாயூர் (16327/16328) எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் குருவாயூரில் தினமும் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.15 மணிக்கு மதுரை வந்து சேர்கிறது.

இதனால், கொல்லத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு சென்னை ரயில் புறப்படும் நிலையில், 12.10க்கு குருவாயூர் ரயில் மதுரை நோக்கி புறப்படுவதால், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி வழியாகச் செல்லும் பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டனர். இரண்டு ரயில்களும் மிகக் குறைந்த இடைவெளியில் புறப்படுவதால் அதன் முழு பலனை மக்கள் பெற முடியவில்லை. இதைத் தவிர்க்க ரயிலின் புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என பயணிகள் பலமுறை கோரிக்கை வைத்தனர்.

இப்போது அதனை ஏற்று, கொல்லம் – சென்னை (16102) விரைவு ரயில் புதிய அட்டவணை பிரகாரம் மாலை 4 மணிக்கு கொல்லத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நேர அட்டவணை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலில் வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இம்மாற்றம் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments Box