அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் இடமாற்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு: தமிழக அரசுக்கு பதில் தர உத்தரவு
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூரிலிருந்து சென்னைக்குப் பாதயாத்திரை மேற்கொண்டதற்காக இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து, அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சங்கத் தலைவர் பெருமாள் பிள்ளை கடந்த ஜூன் 11 முதல் 19 வரை சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் பணியாற்றி வந்த சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. துறை ரீதியான விசாரணை இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வாறு திடீரென இடமாற்றம் செய்தது தன்னிச்சையான நடவடிக்கை என அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தனது இடமாற்ற உத்தரவை ரத்து செய்யவும் அதற்கு தடை விதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 29-க்கு ஒத்திவைத்தார்.