‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் விரைவாகச் செயல்படவில்லை: கே. பாலபாரதி குற்றச்சாட்டு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்டாலும், அதை அரசு நிர்வாகம் சுறுசுறுப்பாக முன்னெடுக்கவில்லை என்று ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத்தலைவர் கே. பாலபாரதி தெரிவித்துள்ளார்.

மதுரையில், தமிழ்நாடு தொழிலாளர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில், அரசு வழங்கிய இலவச வீட்டுமனை மற்றும் பட்டா தொடர்பான கணக்கெடுப்பு ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், கூட்டமைப்புத் தலைவர் ச. மகேஸ்வரி தலைமையேற்றார். செயலர் நா. சரண்யா, பொருளாளர் அழகராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக அரசு கடந்த 25 ஆண்டுகளில் பல ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைகளை வழங்கியுள்ளது. ஆனால், சிலருக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை; பட்டா இருந்தும் வீட்டு மனை ஒதுக்கப்படாதவர்களும் உள்ளனர். இதனை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

அதனை ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத்தலைவர் கே. பாலபாரதி, ஆதித் தமிழர் கட்சி நிறுவனர் கு. ஜக்கையன் ஆகியோர் வெளியிட்டனர். பின்னர், கே. பாலபாரதி கூறியதாவது:

“உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஆனால், நிர்வாகம் அதனை வேகமாக செயல்படுத்தவில்லை. மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தாலும், அது நடைமுறைப்படுவதில்லை. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

சிறப்பாக, தூய்மைப் பணியாளர்களான அருந்ததியர்கள் வீடற்றவர்களாகவும், பட்டா இல்லாதவர்களாகவும் உள்ளனர். அவர்களுக்கு முன்னுரிமை அளித்து வீடுகள் கட்டித் தர மாநில அரசு முன்வர வேண்டும். ஆனால், அவர்கள் அளிக்கும் மனுக்களுக்குக் கூட அதிகாரிகள் பதில் வழங்குவதில்லை,” என்றார்.

பின்னர், கு. ஜக்கையன் பேசுகையில்,

“அருந்ததியர்களுக்கு வீட்டு மனை வழங்கப்பட்டாலும் பட்டா இல்லை; சிலருக்கு பட்டா இருந்தும் வீட்டு மனை இல்லை. இதற்கு முதல்வர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களில் கடைநிலை சமூகமாக உள்ள அருந்ததியர்கள் அரசின் மீதான அதிருப்தியில் உள்ளனர். இது வரவிருக்கும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

அவர்களுக்கென தனியாக முகாம் நடத்தி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்,” என்றார்.

Facebook Comments Box