சென்னை: வாக்காளர் பட்டியல் புகார் – நடவடிக்கைகள் குறித்த அறிக்கை கோரி மனு

வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை முழுமையான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடும் கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில், ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டதாக, போலி வாக்காளர்கள் பட்டியலில் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்காமல், ராகுல் காந்தியை மிரட்டும் நோட்டீஸ் அனுப்புவதால் ஜனநாயக அமைப்புகள் பலவீனப்படுத்தப்படுவதாகவும், இதனை நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனக் கோரி கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட சிவகுமார் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், அனைத்து தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியல் தரவுகளை பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் PDF வடிவில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் மோசடி புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி கேட்டுள்ளார். இந்த பொதுநல வழக்கு விரைவில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box