கனிமவளக் கொள்ளை மட்டுமே திமுக நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதி என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மணல் கொள்ளையில் சுமார் 4,730 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது அமலாக்கத்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சட்டவிரோத மணல் கொள்ளை விவகாரத்தில், அரசு அதிகாரிகளின் உடந்தையுடன் தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் மோசடியில் ஈடுபட்டதாகவும், மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது. தற்போது, தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு அமலாக்க இயக்குனரகம் ஜூன் 14ம் தேதி எழுதிய கடிதத்தின் விவரம் வெளியாகியுள்ளது.
இக்கடிதத்தில், சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த 9 மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஆண்டில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவை விட 23.64 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுப்பணித் துறையிடம் உள்ள இடங்களில் மணல் அள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்துள்ள நிலையில், மணல் ஒப்பந்ததாரர்கள் ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர்.
அமலாக்கத் துறையினர் ஆய்வு செய்த நான்கு மணல் குவாரிகளில், ஒப்பந்ததாரர்கள் 30 மடங்கு அதிகமாக மணல் அள்ளியுள்ளனர். 4.9 ஹெக்டேரில் மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட இடத்தில் 105 ஹெக்டேர் மணல் அள்ளப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. 5 மாவட்டங்களில் மொத்தம் 190 ஹெக்டேர் நிலப்பரப்பில் 28 இடங்களில் மணல் அள்ளுவதற்கு ஒப்பந்ததாரர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், 987 ஹெக்டேர் அளவுக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை கடிதத்தில் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வுக்கு முன்னும் பின்னும் மணல் அள்ளும் நிலை குறித்த தொழில்நுட்ப அறிக்கையையும் தெளிவான செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பயன்படுத்தி அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ளது. ஜிபிஎஸ் கருவி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், 273 மணல் இயந்திரங்கள் பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. தமிழகத்தில் இந்த ராட்சத மணல் அள்ளும் இயந்திரத்தை 16 பேர் வாங்கியுள்ளதாக அமலாக்கத்துறை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், அமலாக்கத் துறை தனது கடிதத்தில் நான்கு நிறுவனங்களைக் குறிப்பிட்டு, மணல் அகழ்வு மற்றும் மணல் கடத்தலுக்கான ஒப்பந்தங்கள் யாருக்கு வழங்கப்பட்டது என்ற விவரங்களையும் குறிப்பிட்டுள்ளது. அவர் எழுதிய கடிதத்தில், சட்டவிரோத மணல் அகழ்வினால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், மணல் ஒப்பந்ததாரர்கள் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அமலாக்கத்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் ரூ.130 கோடி மதிப்புள்ள மணல் ஒப்பந்ததாரர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் ரூ.128 கோடி மதிப்பிலான 209 மணல் அள்ளும் இயந்திரங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மணல் ஒப்பந்ததாரர்களின் 35 வங்கிக் கணக்குகளில் இருந்து 2.25 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
முழுக்க முழுக்க அதிகாரிகளின் துணையுடன் நடந்த இந்த மணல் கொள்ளை தொடர்பாக ஏற்கனவே கடந்த ஏப்ரல் 25ம் தேதி அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினர். ஆனால், தமிழக அரசுக்கு பேரிழப்பை ஏற்படுத்திய இந்த மணல் கொள்ளை குறித்து திமுக அரசு இதுவரை எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் அண்ணாமலை.
Discussion about this post