“இரு அமைச்சர்கள் எனக்கு தொந்தரவு செய்கிறார்கள்” – புதுச்சேரி எம்எல்ஏ சந்திர பிரியங்கா அதிரடி குற்றச்சாட்டு
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சந்திர பிரியங்கா, தனது அரசியல் வளர்ச்சியை தடுக்க 2 அமைச்சர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“புதுச்சேரியில் கட் அவுட் வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை நாங்கள் மதிக்கிறோம். இருப்பினும் சில நேரங்களில் கட்சியினரால் கட் அவுட் வைக்கப்படுகிறது. சமீபத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு அதுகுறித்து எனக்கு சம்மன் வந்தது. விசாரித்தபோது, இதற்குப் பின்னால் ஒரு அமைச்சர் இருப்பது தெரியவந்தது.
என்னை குறிவைத்து தொடர்ந்து குறுகிய மனப்பான்மையோடு செயல்பட்டு வருகின்றனர். ஒருவரின் கட்டுப்பாட்டில் இல்லாத பெண்ணை எவ்வாறு துன்புறுத்த முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இது அரசியலில் நாகரிகமான நடைமுறை அல்ல. எல்லாரையும் குறை கூறவில்லை, ஆனால் இரண்டு அமைச்சர்கள் மட்டும் எனது அரசியல் முன்னேற்றத்திற்கு இடையூறு செய்கிறார்கள்.
முதல்வரை என் தந்தைபோல மதிப்பதால், அவருக்காகவே நான் அந்த அமைச்சர்களின் பெயர்களை வெளிப்படுத்தவில்லை. எனக்கு தரப்படும் தொல்லையை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை அவர்களும் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த வீடியோவை வெளியிட்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.