தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க முடியாது – ஐகோர்ட்

சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்து, உழைப்போர் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுரேந்தர், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டார்.

அதே சமயம், தூய்மைப் பணியாளர்களுக்கு கடைசியாக வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவு இருந்தது. இந்த தனி நீதிபதியின் உத்தரவை தடை செய்யவும், ரத்து செய்யவும் உழைப்போர் உரிமை இயக்கம் மேல் முறையீடு செய்தது.

மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆர்.சக்திவேல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தூய்மைப் பணிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை குறிப்பிட்டு, தனி நீதிபதி உத்தரவை தடுக்க வேண்டும் என்று கேட்டார்.

சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், தனி நீதிபதி உத்தரவின் அடிப்படையில், தொழிலாளர் நல நீதிமன்ற வழக்கு முடியும் வரை, தற்காலிகமாக தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.761 ஊதியத்தை ஒப்பந்த நிறுவனம் தொடர்வதாக தெரிவித்தார்.

ஒப்பந்த நிறுவனம் தரப்பில், தனி நீதிபதி உத்தரவுக்குப் பிறகு 800 பணியாளர்கள் பணியில் சேர்ந்த நிலையில், மேல் முறையீட்டு வழக்கின் பின் பணிக்கு வர மறுக்கின்றனர். இதனால் 2000 டன் குப்பைகள் தேங்கி, நோய் பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இனியும் அவர்கள் பணிக்கு வராவிட்டால், புதிய பணியாளர்கள் நியமிக்க வேண்டிய நிலை வரும். அதனால் தூய்மைப் பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்த வேண்டும் என்று கோரப்பட்டது.

அனைத்து தரப்புகளின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மனுவுக்கு அக்டோபர் 6-ம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை மாநகராட்சிக்கும், ஒப்பந்த நிறுவனத்துக்கும் உத்தரவிட்டனர்.

மேலும், தூய்மைப் பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்தும் வகையில், மனுதாரர் தரப்பின் வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Facebook Comments Box