குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகை – பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை 10.30 மணிக்கு கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து இந்திய விமானப்படை சிறப்பு விமானத்தில் புறப்பட்டு, மதியம் 11.40 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் அவர் வந்தடைகிறார். அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர், மதியம் 12.10 மணிக்கு காரில் புறப்பட்டு, 12.30 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையம் சென்று, சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அதன் பின், மதியம் 1.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, 1.35 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகைக்கு வந்து ஓய்வு எடுக்கிறார்.
நாளை (செப்டம்பர் 3) காலை 9.20 மணிக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட்டு, 9.35 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு, காலை 10.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் சென்றடைவார். பின்னர், ஹெலிகாப்டரில் திருவாரூருக்கு புறப்படுகிறார்.
திருவாரூரில் உள்ள நீலக்குடி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார். அதன் பின், ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் சென்று, ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
அங்கிருந்து திருச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து இந்திய விமானப்படை சிறப்பு விமானத்தில் புறப்பட்டு, டெல்லி திரும்புகிறார்.
குடியரசுத் தலைவர் பயணத்தை முன்னிட்டு, சென்னை பழைய விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், விமான நிலைய உயர் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, உளவுத்துறை அதிகாரிகள், வி.ஐ.பி. பாதுகாப்பு பிரிவு, சென்னை காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னை, திருச்சி விமான நிலையங்கள் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் உட்பட குடியரசுத் தலைவர் செல்லும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.