ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வழக்கு: அதிமுக நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்கால ஜாமீன்

திருச்சி அருகே நடைபெற்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டத்தின்போது, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில், அதிமுக நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட துறையூரில் பழனிசாமி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தபோது, அங்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டு, அதன் ஓட்டுநர் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்காக அதிமுகவைச் சேர்ந்த 10 பேருக்கு எதிராக துறையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, துறையூரைச் சேர்ந்த அமைதி பாலு எனப்படும் பாலமுருகவேல், விவேக் (விக்கி), தீனதயாளன், கலிங்கமுடையான்பட்டியைச் சேர்ந்த பொன் காமராஜ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். மனுவில், “ஆகஸ்ட் 24 ஆம் தேதி மாலை பழனிசாமி துறையூர் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, எங்கள்மீது பொய்யாக ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவத்துடன் எங்களுக்கு தொடர்பில்லை. எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி எஸ்.மதியின் அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “பழனிசாமியின் கூட்டங்களுக்கு இடையூறு செய்யவே ஆம்புலன்ஸ்களை அந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்” என வாதிடப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

விசாரணைக்குப் பிறகு, நீதிபதி மனுதாரர்களான நால்வருக்கும் இடைக்கால முன்ஜாமீன் வழங்கி, இந்த வழக்கில் துறையூர் காவல் ஆய்வாளர் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அடுத்தடுத்த விசாரணையை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Facebook Comments Box