நடிகர் ரவி மோகன் வழக்கு : தனி நீதிபதி உத்தரவு ரத்து – ஹை கோர்ட் புதிய உத்தரவு
படத்தில் நடிப்பதற்காக பெற்ற முன்பணத்தை திருப்பித் தர வேண்டுமென நடிகர் ரவி மோகனுக்கு ரூ.5.90 கோடி உத்தரவாதம் தாக்கல் செய்யச் சொன்ன தனி நீதிபதி உத்தரவை, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்துள்ளது.
பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில், “நடிகர் ரவி மோகன், படத்தில் நடிப்பதற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன்பணத்தை திருப்பித் தர வேண்டும்” என கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், “தரப்பட்ட கால்ஷீட்டில் படம் எடுக்காததால், நிறுவனத்தால் தமக்கு இழப்பு ஏற்பட்டது. எனவே, 9 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என நடிகர் ரவி மோகனும் எதிர்மனு தாக்கல் செய்தார்.
இரு மனுக்களையும் விசாரித்த தனி நீதிபதி அப்துல் குத்தூஸ், நடிகர் ரவி மோகன் ரூ.5.90 கோடி உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவுக்கு எதிராக, அவர் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ரவி மோகன் தரப்பில் வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலன் வாதிட்டார். இதை விசாரித்த நீதிபதிகள் எம். சுந்தர் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து வழக்கை நடுவர் விசாரணைக்கு அனுப்பியது. மேலும், நடுவராக உயர்நீதிமன்ற நீதிபதி எம். சத்திய நாராயணனை நியமித்து உத்தரவிட்டது.