ராமேசுவரம் மீனவர்களின் நீதிமன்றக் காவல் 5-வது முறையாக நீட்டிப்பு
ராமேசுவரத்தைச் சேர்ந்த 7 விசைப்படகு மீனவர்களின் நீதிமன்றக் காவலை இலங்கை நீதிமன்றம் 5-வது தடவையாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த ஈசாக் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ரூதர், சண்முகம், எடிசன், சக்திவேல், ஜெகதீஷ், டல்வின் ராஜ், அன்பழகன் ஆகியோர் 7 பேரும் கடந்த ஜூலை 13-ஆம் தேதி நெடுந்தீவு அருகே பாக்கு நீரிணை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை மீறி மீன்பிடித்ததாகவும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.
இதையடுத்து, அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்று (புதன்கிழமை) காவல் முடிவடைந்ததால் மீனவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரித்த நீதிபதி, அவர்களின் காவலை செப்டம்பர் 17-ஆம் தேதி வரை மேலும் நீட்டித்து உத்தரவிட்டார். அதன்பின், மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.