தமிழகத்தில் இன்றும் நாளையும் சில இடங்களில் மிதமான மழை – வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று, நாளை (செப்டம்பர் 4 மற்றும் 5) ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

செப்டம்பர் 2-ஆம் தேதி வட தமிழகத்தில் சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, வேலூரில் 11 செ.மீ. மழை பெய்தது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபடுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வரும் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்படாது. சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பகுதியளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மாநிலத்தை கடந்து செல்ல வாய்ப்புள்ளது.

அதே சமயம், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், ஆந்திரக் கடலோரம் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Facebook Comments Box