மீலாது நபி – தொடர் விடுமுறையை முன்னிட்டு 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மீலாது நபி மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் 4ம் தேதி சுபமுகூர்த்தம், 5ம் தேதி மீலாது நபி, 6 மற்றும் 7ம் தேதிகள் வார இறுதி விடுமுறைகள் என்பதால், பயணிகள் நெரிசலை சமாளிக்க கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையின் கிளாம்பாக்கம் நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செப்டம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் மொத்தம் 1,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் மாதவரம், கோயம்பேடு நிலையங்களில் இருந்து கூடுதலாக 130 பேருந்துகள் விடப்படுகின்றன.
மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு நகரங்களுக்கு 350 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுமுறை பயணிகள் சென்னைக்கு திரும்புவதற்காக செப்டம்பர் 7ம் தேதி 875 பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு, விடுமுறை நாட்களில் மொத்தம் 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வார இறுதி மற்றும் மீலாது நபி விடுமுறையை பயன்படுத்தி பயணிக்க 41,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.