கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 4 ஆண்டுகளில் 20 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1,752 கோடி நிதியுதவி
கடந்த 4 ஆண்டுகளில், கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.1,752 கோடி மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் 41-வது கூட்டத்துக்கு வாரியத் தலைவர் பொன்.குமார் தலைமையேற்றார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலர் கொ.வீரராகவ ராவ், வாரிய செயலர் கே.ஜெயபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாரியம் தொடங்கிய நாளிலிருந்து, கடந்த ஜூலை 31 வரை மொத்தம் 27 லட்சத்து 46,572 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு விபத்து, ஊனம், இயற்கை மரணம், கல்வி, திருமணம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், நோய்சிகிச்சை போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.2,608 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 15 லட்சத்து 74,116 பேர் புதிதாக வாரியத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இதற்கிடையில், 20 லட்சத்து 60,600 தொழிலாளர்களுக்கு ரூ.1,752 கோடி மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அரசு தரப்பினர், வேலைவாய்ப்பு வழங்குநர் தரப்பு பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.