வரி முறைகேடு வழக்கு: மதுரை மேயரின் கணவர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடர்பான வழக்கில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தின் ஜாமீன் மனு செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் பொன் வசந்த் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் முகமதுநூர் உள்ளிட்ட 7 பேருக்கு, மதுரை உயர்நீதிமன்ற அமர்வு ஜாமீன் வழங்கியது. இதேபோல், பொன் வசந்த் மற்றும் பில் கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஜாமீன் கோரி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மாவட்ட நீதிபதி எஸ். சிவகடாட்சம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் பழனிசாமி வாதாடியதாவது:

  • பில் கலெக்டர் ரவிச்சந்திரன் தனிப்பட்ட நபரை வேலைக்கு வைத்து, கணினி பாஸ்வேர்டை தவறாக பயன்படுத்தி 33 வரி பதிவுகளில் மாற்றங்கள் செய்துள்ளார்.
  • பொன் வசந்த் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பல வணிக வளாகங்களுக்கு விதிக்க வேண்டிய வரியை குறைத்துள்ளார்.
  • குறிப்பாக, காளவாசல் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வரி குறைக்க ரூ.10 லட்சம் வரை பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது.

எனவே, இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பு வலியுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவின் விசாரணை செப்டம்பர் 9ஆம் தேதிக்கும், பொன் வசந்தின் மனு விசாரணை செப்டம்பர் 10ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Facebook Comments Box