‘20 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை’ – புதுச்சேரி அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் பேரணி

இருபது ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாததால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணியாற்றும் அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர்.

புதுச்சேரி அரசு கல்லூரி பேராசிரியர்கள் ஒருங்கிணைந்த போராட்டக் குழுவின் சார்பில், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி அருகே தொடங்கிய பேரணிக்கு குழுத் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். செயலர் சங்கரய்யா முன்னிலை வகித்தார். பேரணி அஜந்தா சிக்னல், மிஷன் வீதி, நேரு வீதி வழியாக சென்று ராஜ்நிவாஸை அடைந்தது. அங்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

இந்தப் பேரணியில் புதுவை மற்றும் காரைக்காலின் பல்வேறு அரசு கல்லூரிகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் பங்கேற்றனர். அதே நேரத்தில், ஏனாமில் உள்ள அரசு கல்லூரி பேராசிரியர்கள் அங்கு வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தங்கள் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில் புதுச்சேரியில் பேரணி நடத்தியதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:

“புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால், இங்குள்ள அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர்கள் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்வில் வெற்றி பெற்ற தகுதியானவர்கள் 2002 முதல் 2018 வரை புதுச்சேரிக்கு அனுப்பப்பட்டனர்.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக அவர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. பல கல்லூரிகள் அரசிடம் பரிந்துரைகள் செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. யுபிஎஸ்சி 2018-ல் வெளியிட்ட அறிக்கையும் புதுச்சேரி அரசால் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதன் விளைவாக, சிலர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உதவி பேராசிரியராகவே பணிபுரிந்து ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிப்படி, உதவி பேராசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கப்பட்டு, பின்னர் இணை பேராசிரியர் பதவிக்கு உயர்த்தப்பட வேண்டும். ஆனால் புதுவை அரசு அதனை அமல்படுத்தவில்லை.

மேலும், கல்லூரி பேராசிரியர்களுக்கான யூஜிசி நிதியைப் பெற்றும், அதனை உரிய நேரத்தில் வழங்காமல், வேறு திட்டங்களுக்கு மாற்றி விடுகின்றனர். இதனால் எங்களுக்கு உரிய ஊதியம் கிடைக்காமல், பல ஆண்டுகளாக சிக்கலில் உள்ளோம்.

சில உதவி பேராசிரியர்கள் நீதிமன்றத்தை நாடி தீர்வு தேடியும், அந்த உத்தரவுகளை உயர்கல்வித் துறை புறக்கணித்துவிட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளையும் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து தான் இந்தப் பேரணியை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது” என அவர்கள் தெரிவித்தனர்.

Facebook Comments Box