பழனிசாமி விமர்சனம் மதுரை மேயருக்கு சிக்கல் – திமுக தலைமை மவுனமாகுமா?
மதுரையில் முகாமிட்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணி பதவி விலகவும், அவரை கைது செய்யவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மேயர் பதவி பறிக்கப்படுவதாக திமுகவினரும், எதிர்க்கட்சியினரும் எதிர்பார்த்தனர். ஆனால் புதிய மேயர் தேர்வில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி இடையே நீடிக்கும் கோஷ்டி காரணமாக, இப்போது மேயராக இந்திராணியே இருக்கிறார்.
தற்போது மேயருக்கு உள்ளூர் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆதரவு, ஒத்துழைப்பு இல்லை. ஆனால், மேயர் தினமும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முன்புபோல், அவருக்கு அரசு நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் வழங்கப்படவில்லை.
கடந்த 3 நாட்களாக மதுரையில் பிரச்சார பயணத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மாநகராட்சி சொத்துவரி முறைகேடு மற்றும் மேயர் பதவி விலக வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஆனால், திமுக தலைமை மவுனம் காப்பதால் உள்ளூர் கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
திமுக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
“மேயரை பதவி நீக்க உள்ளூர் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தடையாக இல்லை. ஆனால் புதிய மேயராக யாரை நியமிப்பது என்பதில் ஒற்றுமை இல்லாததால், மேயரை தேர்வு செய்யும் பொறுப்பு அமைச்சர் கே.என். நேருவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் உள்ளூரில் கட்சியினருடன் ஒற்றுமையின்மையால், மேயராக இந்திராணியே நீடிக்க வாய்ப்பு உள்ளது என கட்சித் தலைமையிடம் தெரிவித்து வருகிறார்.”
முன்னாள் மண்டலத் தலைவர்கள் கூறியதாவது:
“சொத்துவரி முறைகேட்டில் எங்கள் தொடர்பில்லை. பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் பெற யாரும் முயற்சி செய்யவில்லை. இந்த விவகாரத்தில் மேயருக்கு ஒரு நியாயம். எங்களுக்கு ஒரு நியாயமா?”