அதிமுகவில் பிரிந்தவர்கள் இணைந்தால் இபிஎஸ் பதவிக்கு சிக்கல்: சிபிஎம் பாலகிருஷ்ணன்

அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் மீண்டும் ஒன்றிணைந்தால், எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவி ஆபத்தில் சிக்கக்கூடும். எனவே, அதை இபிஎஸ் ஒருபோதும் ஏற்க மாட்டார் என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணி, கல்வித் துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமாக முடிந்தது. மாநிலச் செயலர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் உரையாற்றியபோது, சிபிஎஸ்இ பாடத்திட்டம் காரணமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமல் விலகியிருப்பதாக குற்றம் சாட்டினார். மாணவர்களின் நலனை புறக்கணித்து பாஜக கொள்கையை செயல்படுத்திய கல்வியமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், கல்வித் திட்டத்தை மாற்ற அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்றார்.

செய்தியாளர்களிடம் பேசியபோது, டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது என்றும், தமிழக அரசைப் போல சிறப்பு பயிற்சிகள் அளித்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார். ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்ற அவர், அதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதிமுக ஒன்றிணைப்பைப் பற்றி கேட்கப்பட்டதற்கு, “அதிமுக என்பது உடைந்த கண்ணாடி போல. அதை மீண்டும் ஒட்டுவது சாத்தியமில்லை. கடந்த காலம் கடந்துவிட்டது. இப்போது ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் இணைந்தால், எடப்பாடி பழனிசாமியின் பதவிக்கு நேரடி சிக்கல் வரும். அதனால் அவர் அதற்கு சம்மதிப்பது இல்லை” என்று பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Facebook Comments Box