தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களைச் சேர்த்து மொத்தம் 7 மாவட்டங்களில் நாளை (செப்டம்பர் 6) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:
தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு காற்றில் வேக மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக நாளை வட தமிழகத்தின் சில பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
செப்டம்பர் 7-ஆம் தேதி ஓரிரு இடங்களில் மழை பெய்யும். மேலும் 8 முதல் 10 ஆம் தேதி வரை மாநிலத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (செப்.6): தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களுடன் புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
செப்.7: ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
செப்.9: கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்யும்.
செப்.10: கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை முதல் 8-ம் தேதி வரை மணிக்கு 40–50 கிமீ வேகத்திலும், சில நேரங்களில் 60 கிமீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவுகள் பதிவான இடங்கள்:
- சென்னை மேடவாக்கம் – 6 செ.மீ
- ஒக்கியம் துரைப்பாக்கம் – 5 செ.மீ
- பள்ளிக்கரணை, கண்ணகி நகர், கோவை சோலையார் – தலா 4 செ.மீ
- திருவள்ளூர் திருவூர், கோவை சின்னக்கல்லார், நீலகிரி அவலாஞ்சி – தலா 3 செ.மீ
இவ்வாறு வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.