அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு இளையராஜா வழக்கு
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில், தனது பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படத்தில் “இளமை இதோ இதோ,” “ஒத்த ரூபாயும் தாரேன்,” “என் ஜோடி மஞ்சக் குருவி” போன்ற பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, இளையராஜாவின் சார்பில் வழக்கறிஞர்கள் கே. தியாகராஜன் மற்றும் ஏ. சரவணன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்தப்பட்டதால், அவற்றை உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரி அனுப்பிய சட்டநோட்டீசுக்கு தயாரிப்பு நிறுவனம், “பாடல்களின் சட்டபூர்வ உரிமையாளரிடம் இருந்து அனுமதி பெற்றோம்” எனக் கூறியிருப்பதாகவும், ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பது விளக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பதிப்புரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்பதால், படத்தில் பாடல்களைப் பயன்படுத்த தடைவிதிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.