ஓபிஎஸ்–சசிகலா–தினகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும்: 10 நாள் அவகாசம் – செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க, கட்சித் தலைமை 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

“ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி சிதறாமல் இருக்க அனைவரும் இணைந்து சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தோம். அதன்பின் முதல்வராக பழனிசாமியை சசிகலாதான் முன்மொழிந்தார். அப்போது எனக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், கட்சி நலனுக்காக அதைத் தியாகம் செய்தேன்.

பழனிசாமி தலைமையில் ஆட்சி வந்தபின், பல தேர்தல்களில் பின்னடைவு ஏற்பட்டது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால், குறைந்தது 30 இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம்.

நாம் பல முறை பழனிசாமியை சந்தித்து, கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா கற்றுக் கொடுத்தது போல, ‘மறப்போம் – மன்னிப்போம்’ என்ற எண்ணத்தோடு அவர்களை அரவணைத்தால்தான் வெற்றி பெற முடியும்.

முக்கியப் பொறுப்பில் இருந்து விலகியவர்கள், இப்போது எந்த நிபந்தனையும் இல்லாமல் திரும்ப வரத் தயாராக உள்ளனர். அதிமுக மீண்டும் வலுப்பெற, அவர்களை உடனடியாக சேர்க்க வேண்டும். இதற்கான முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும். இல்லையெனில், நாங்களே ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்போம். இதற்குப் பதில் வந்தால்தான், பழனிசாமியின் பிரச்சாரப் பயணத்தில் நான் பங்கேற்பேன்,” என செங்கோட்டையன் தெரிவித்தார்.

செங்கோட்டையன் வருகையின்போது, கோபி அதிமுக அலுவலகத்தில் தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் வலியுறுத்தல், அதிமுகவில் அரசியல் அலைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments Box