கொடைக்கானல் மன்னவனூர் ஆட்டுப் பண்ணை தற்காலிக மூடல் – சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேம்மலைப் பகுதியில் உள்ள மன்னவனூர் ஆட்டுப் பண்ணை பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்டம்பர் 6) மற்றும் நாளை (செப்டம்பர் 7) பொதுமக்கள் நுழைவுக்கு மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இங்கு மத்திய அரசின் செம்மறி ஆடு மற்றும் ரோம உற்பத்தி தென்மண்டல ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் ரோம உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன. அதோடு, முயல் இன விருத்தியும் மேற்கொள்ளப்படுகிறது. ஒயிட் ஜெயன்ட், சோவியத் சிஞ்சில்லா, நியூசிலாந்து ஒயிட், டச், கிரே ஜெயன்ட், பிளாக் பிரவுன் உள்ளிட்ட பல்வேறு வகை முயல்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றன.

பொதுவாக சுற்றுலா பயணிகள் இந்த பண்ணையைப் பார்வையிட்டு, முயல்களையும் விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

ஆனால் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இரண்டு நாட்கள் சூழலியல் சுற்றுலா மையம் மூடப்பட்டு, பயணிகளுக்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box