தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நாளை கனமழை – 12ம் தேதி வரை மழை தொடரும் சாத்தியம்

தமிழகத்தில் திருவண்ணாமலை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை (செப்டம்பர் 7) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,

“தென்னிந்தியாவின் மீது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் நாளை வட தமிழகத்தில் சில பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். செப்டம்பர் 8 முதல் 10 வரை தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் 11, 12 தேதிகளில் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை தொடரலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மழை முன்னறிவிப்பு:

  • செப். 7: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர்.
  • செப். 8: ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்.
  • செப். 9: கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு.
  • செப். 10: சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு.

சென்னை மற்றும் கடலோரப் பகுதிகள்:

சென்னையில் நாளை வானம் பகுதி நேர மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்தமிழக கடலோரம், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை முதல் 9ம் தேதி வரை மணிக்கு 40–50 கிமீ வேகத்தில், இடையிடையே 60 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் கடல் பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் (இன்று காலை 8.30 மணி வரை):

  • செங்கல்பட்டு – மாமல்லபுரம்: 5 செ.மீ
  • தஞ்சாவூர் – கும்பகோணம்: 4 செ.மீ
  • மயிலாடுதுறை – கொள்ளிடம், மணல்மேடு: தலா 4 செ.மீ
  • செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம்: 4 செ.மீ
  • நீலகிரி – பந்தலூர், விண்ட் வொர்த் எஸ்டேட்: தலா 4 செ.மீ
  • கோவை – சின்னக்கல்லார்: 4 செ.மீ
Facebook Comments Box