தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, திருவண்ணாமலை, திருச்சி, கடலூர் உட்பட 8 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 7) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்னிந்தியப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று வட தமிழகத்தின் சில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம். நாளை முதல் 10ஆம் தேதி வரை பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், செப்டம்பர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இன்றைய கனமழை வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர். நாளை ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் மழை அதிகரிக்கலாம். செப்டம்பர் 9ஆம் தேதி கோவை மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களிலும், 10ஆம் தேதி சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். இதேவேளை, தென் தமிழக கடலோரம், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் செப்டம்பர் 9ஆம் தேதி வரை மணிக்கு 40–50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணி வரை பதிவான மழைப் பொழிவின்படி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழை பெய்துள்ளது. தஞ்சாவூர் கும்பகோணம், மயிலாடுதுறை கொள்ளிடம், மணல்மேடு, செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம், நீலகிரி பந்தலூர், விண்ட்வொர்த் எஸ்டேட், கோவை சின்னக்கல்லாறு ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Facebook Comments Box